Thursday 7 March 2013

காவிரி - ஆறும் நீர்த் தகராறும்-இரண்டாம் பகுதி.



                                 காவிரி
                        ஆறும் நீர்த் தகராறும்
           ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி அடுத்த நூற்றாண்டில் நுழைந்து கி.பி.2013 ஆம் ஆண்டாகிய சமகாலம் வரையில் தொடர்ந்து நிலவும் காவிரி ஆற்றுநீர்த் தகராறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி!
                                                     (இரண்டாம் பகுதி)

‘பொன்னி’ என்ற பெயரைப் பெற்றக் காரணம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    
காவிரி ஆற்றிற்கு
காவேரி’ என்று பேச்சு வழக்குப் பெயர் இருப்பது போன்றே ‘பொன்னி’ என்ற மற்றொரு பெயராலும்   இந்த ஆறு சுட்டிக்காட்டப்பட்டும் அறியப்பட்டும் வருகின்றது.

     காவிரி ஆறு  ‘பொன்னி’ என்ற பெயரைப் பெற்றதற்கான காரணம் குறித்துப் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

  காவிரி ஆறு தான் பாயும் இடங்களை பொன்மயமாக்கி வளப்படுத்துவதால்பொன்னிஎனப் பெயர் பெற்றதாய் சிலர் கூறுவர்.

              சங்ககாலத்தில், குடகு நாட்டு மலை ‘‘பொன்படு நெடுவரை’’
- பொன் போலத் தோன்றும் மலை- என்று   போற்றப்பட்டதால் அங்கு தோன்றும் காவிரியாற்றிற்குப்பொன்னிஎன்னும் பெயர் வந்தது என்று கூறுவோரும் உண்டு.

         ஆயினும், பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டாம் திருமுறையில் காவிரியினைப்பற்றிக் குறிப்பிடுகையில், சேக்கிழார்-

வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.’ எனும் பாடலில்

‘‘மணம் கமழ்கின்ற மலர்களினாலும், நீரினாலும் வழிபாடு செய்து, சிவந்த பொன்மயமான மணல் நிறைந்த காவிரிக் கரையின் இருமருங்கிலுமுள்ள எண்ணற்ற திருக்கோவில்களில் எழுந் தருளியிருக்கும் எம் தலைவனை வணங்கி வருதலினால், குளிர்ந்த காவிரி…….’’ என்று கூறுகின்றார்.

     மேலும், கி.பி.1269 முதல்1370 வரையில் வாழ்ந்ததாய்க் கூறப்படும் வேதாந்த தேசிகர் அவர்கள் தனது ‘பகவத் தியான சொப்னம்’ 2 ஆம் பாடலில், அவர் போற்றி வணங்கும் அரங்கநாதரைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

        
அரங்கநாதரின் தாமரையை ஒத்த காலடிகள் காவிரியின் பொன் மணலில் தோன்றினஎன்று கூறுகின்றார்.

     மேலும், கி.பி. 1855 முதல் கி.பி. 1897 வரையில் வாழ்ந்தமனோன்மணியம்சுந்தரம் பிள்ளை தனது நவீன நாடக நூல் மனோன்மணியத்தில் காவிரி ற்றினை

பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்
வருந்திய தேவரோ டருந்த’…

என்ற
வரிகளின் மூலம்பொற்றாதுக்கள் உடைமையின் பொன்னி
என்று குறிப்பிடுகின்றார்.


   ஆகவே, இவற்றையெல்லாம் நோக்கும்போது, ‘பொன்மயமான’ மணல் நிறைந்த கரையினைக் கொண்டிருத்திலால் காவிரி ஆற்றிற்கு ‘பொன்னி’ என்ற பெயர் வந்தது என்று கூறினால் அது மிகை ஆகாது.

    மேலும், பண்டைய காலந்தொட்டு இன்றய காலம்வரையிலும் ‘பொன்னி’ எனும் இப்பெயர் பேச்சு வழக்கில் இல்லாது இலக்கியங்களிலும், பாடல்களிலும், கவிதைகளிலும் வழங்கிவரும் இலக்கியப் பெயராகவே விளங்குவதையும் அறியமுடிகின்றது.

   மேலும், தமிழ் மக்கள் மட்டுமே காவிரி ஆற்றினை பொன்னிஎன்ற பெயரிலும் குறிப்பிடுகின்றனர் என்பது மேலும் ஒரு சிறப்பு.

காவிரி ஆறு உருவாகுமிடம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி  பகுதியில் உள்ள, திசையெங்கும் மலையெழில் கொஞ்சும், ’இந்தியாவின் மழைக்காடுகள்’ என்றழைக்கப்படும் மலைப்பகுதியான கூர்க் (குடகு) மாவட்டத்தில் உள்ள மெர்க்காராவுக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 1,340 மீட்டர், அதாவது 4,422 அடி, உயரமான இடத்தில் ‘தலைக்காவேரி’ எனும் பெயரில், சமவெளிகளில் பேரிரைச்சலுடன் பெருக்கெடுத்து ஓடும் அகண்ட  றான காவிரி று ஆச்சரியமூட்டுமளவில் அமைதியாய் சிறிய இடத்தில் சிறியவுருவில் உருவாகின்றது.

காவிரி பயணம் செய்யும் பாதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற காவிரி ஆற்றின் அமைப்பு ஒரு வித்தியாசமான புவியியல் பண்பினைக்கொண்டதாய் இருக்கின்றது.
     ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களின்போது நம்பகமான தென்மேற்குப் பருவமழையின் ஆதிக்கம் கொண்ட, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் மலைப்பாங்கான நீர்ப்பிடிப்புப்பகுதி மேல் பகுதியாகவும், அக்டோபர் முதல்   டிசம்பர் வரையிலான மாதங்களின்போது நம்பகமே இல்லாத பருவமழை கொண்ட  தமிழ்நாட்டின்  சமவெளிப்பகுதி  கீழ்ப் பகுதியாகவும் கொண்டதாக இருக்கின்றது காவிரி ஆறு ஓடும் பகுதி.
மேல்பகுதி:-
~~~~~~~~~~~~

                     1340 மீ உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடரும்,     தென் இந்தியாவின் மிக பெரிய ஆறான காவிரி ஆறு வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் முன்னர் கர்நாடகா (அப்போதைய மைசூர்)  மற்றும்  தமிழ் நாடு (அப்போதைய மெட்ராஸ்) மாநிலப் பகுதிகளைக் கடக்கின்றது.

     கர்நாடகாவில், காவிரியோடு சேரும் முதல் முக்கிய துணையாறு துணை ஆறு ஹாரங்கி ஆகும். பின்னர், காக்கப் (Kakkabe), கடமர் (Kadamur), கும்மானஹொலே(Kummanhole) போன்ற சிறிய துணையாறுகள் சேருகின்றன.  பின்னர், ஹேமாவதி, லக்ஷ்மணதீர்த்தம் ஆகிய இரண்டு முக்கிய துணையாறுகள் சேர, கிருஷ்ணராஜசாகருக்கு அருகே மற்றொரு முக்கிய துணையாறான கபினி ஆறு இணைகின்றது. இக் கபினி ஆறு கேரள மாநிலம் வடக்கு மலபார் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குபுற சரிவுகளில் உருவாகி கர்நாடகப் பகுதியில் ஓடி காவிரியுடன் வந்து கலக்கின்றது.

    
பின்னர்
, மலைத்தொடர்கள் வழியாக 64 கிமீ(40 மைல்கள்) தூரம் ஓடி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையேயான எல்லையாக காவிரி ஆறு அமைகின்றது. காவிரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள்  நுழையும் முன் மற்றொரு துணை ஆறான ஆர்க்காவதி அதனோடு  சேருகின்றது.
                                              (தொடரும்)

No comments:

Post a Comment