Tuesday 30 April 2013

காவிரி ஆறும் நீர்த் தகராறும் (மூன்றாம் பகுதி)

காவிரி
                        ஆறும் நீர்த் தகராறும்
      ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி அடுத்த நூற்றாண்டில் நுழைந்து கி.பி.2013 ஆம் ஆண்டாகிய சமகாலம் வரையில் தொடர்ந்து நிலவும் காவிரி ஆற்றுநீர்த் தகராறு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இம்முயற்சி!
                                                    (மூன்றாம் பகுதி)
காவிரி பயணம் செய்யும் பாதை
கீழ்ப்பகுதி
~~~~~~~~~~
     கர்நாடகத்தில் ஓடும் ஹாரங்கி, ஹேமாவதி, சிம்ஷா, அர்க்காவதி, லட்சுமண தீர்த்தம்,  சுவர்ணவதி ஆகிய முக்கிய துணை ஆறுகள் காவிரியுடன் வந்து கலந்தபின், தமிழ்நாடு மாநிலத்தில் ஓடத்துவங்கும்  காவிரி ஆற்றின் மீது தமிழ்நாட்டில் மேட்டூர் அணை, மேலணை மற்றும் கல்லணை ஆகிய அணைக்கட்டுகள் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டு ள்ளன.
    தமிழகத்தில் சமவெளிப்பகுதியில் காவிரி நுழையும் இடத்தில்
மேட்டூர் அணை அமைக்கப்பட்டுள்ளது.
          மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது.  தமிழகத்தில் உற்பத்தி ஆகும் பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன.

நொய்யல் ஆறு
~~~~~~~~~~~~~~~~
      தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி  கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து வரும் நொய்யல் ஆறு காவிரி ஆற்றுடன் கலக்கிறது.
பவானி ஆறு
~~~~~~~~~~~~~
     தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றும் பவானி ஆறு, மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்கிருந்து திரும்பி மீண்டும் தமிழகத்துக்குள் வந்து ஈரோடு மாவட்டம் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

அமராவதி ஆறு

~~~~~~~~~~~~~~~~~
பழனி
மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கின்றது.
   பவானி ஆறு காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் முக்கொம்பு என்று அழக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள மேல் அணைக்கு (upper anicut) மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு காவிரி ஆறு அகன்று, “அகண்ட காவிரியாகக் காட்சி தருகின்றது.
   காவிரி ஆறு மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் எனப்பெயர் பெறுகின்றது.  தென்பிரிவு காவிரியாகவே தொடர்கின்றது.
   கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளைகப் பரவிப் பாய்கின்றன.
         இறுதியாக, முன்னர் தஞ்சை மாவட்டத்திலிருந்ததும் தற்காலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருப்பதுமான பூம்புகார் எனும் நகரில் குறுகிய நிலையை அடைந்து வங்காளவிரிகுடாக் கடலில் கலக்கின்றது காவிரி ஆறு.
உற்பத்தி மற்றும் சங்கமிக்கும் இடங்களின் பெயர் சிறப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      தான் உற்பத்தியாகும் மலையிடமும் தான் கடலோடு சங்கமிக்கும் கடற்கரை நகரும் தன் பெயராலாயே விளங்கச் செய்த பெருமை காவிரி ஆற்றிற்கு உண்டு. எனினும், காவிரி, பூம்புகார் நகருக்கு மட்டும் மிகப்பெரிய பெருமையையும் புகழையும் சேர்த்தது  என்றால் அது மிகையாகாது.
      அதெப்படி?    உற்பத்தியாகும் இடத்திற்கு ‘தலைக்காவிரி’ என்ற அடையாளப்பெயர் ஏற்பட்டு விளங்கிவருவது என்பது சரி. ஆனால், அது கடலினுல் புகும் நகருக்கு பூம்புகார் என்பதுதானே பெயர், அவ்வாறு இருக்கையில் அதெப்படி காவிரியின் பெயராகும் என்ற ஐயம் எழக்கூடும். ஆயினும், ஆராய்ந்து பார்க்கும்போது எளிதில் விளங்கும்.
      காவிரி ஆறு கடலினுல் புகும் இடமாகிய பூம்புகார் எனும் ஊர் அதன் சுற்றுவட்டாரத்தினரால், இன்றளவும், ‘காவேரிப்பூம்பட்டினம்’ என்றும்காவிரிப்பூம்பட்டினம்’ என்றும் அறியப்படுகின்ற நகராகும். பட்டினம் என்பதற்கு நெய்தல் நிலத்து ஊர் என்பது பொருள். தமிழ் கூறும் ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். எனவே, ‘பட்டினம்’ என்பது கடற்கரை ஊர் என்றாகின்றது. இப்பொருள்படவே, ‘காவிரிப்பூம்பட்டினம்’, அதாவது காவிரி ஆறு கடலினுள் புகும் கடற்கரை ஊர் என்ற அழகிய பொருள்பொதிந்த பெயரினைக் கொண்ட ஊராகத் திகழ்கின்றது அவ் ஊர்.
       சங்க காலச் சோழ மன்னர்களின் தலைநகராய் விளங்கிய அந் நகருக்குப் பூம்புகார் என்றப் பெயர் வரக்காரணம் என்னவெனில், வீரம் செறிந்த சோழ மன்னர்களின் தலைநகராகிய அந்நகருக்குள் காவிரி மட்டுமே புகும் பகைவர் எவரும் புகார் என்று பொருள் படும்படியாக அந்நகர் அறியப்பட்டு, அதன்பொருட்டே பூம் புகார் எனும் பெயரில் வழங்கப்படலாயிற்று. அதுவே, பிற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்
என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்நிலையில், கிபி. 1973ம் ஆண்டில் தமிழக அரசு பூம்புகார் எனும் பழங்காலப் பெயரினை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டுவந்தது.

ஆற்றின் நீளம்
~~~~~~~~~~~~~~~~~
   காவிரி ஆற்றின் நீளம் 800 கி.மீ. ஆகும். இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலுமாக ஓடுகின்றது. இரு மாநிலங்களின் எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகின்றது.
காவிரி ஆற்றுப் பகுதியின் நீர்ப்பாசன அபிவிருத்தி வரலாறு:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    காவிரி ஆற்றுப் பகுதியின்
நீர்ப்பாசன அபிவிருத்தியானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்றால் அது மிகையாகாது. ஆற்றுப்போக்கு முழுமைக்கும் எங்கெல்லாம் பயிர் சாகுபடிக்கு ஏற்ற மண், நிலம் மற்றும் வரையறைகள் பாசனத்திற்கு சாதகமாக இருந்ததோ, அவையெல்லாம் காவேரி ஆற்றின் நீர்ப்பாசனப் பகுதியாக உருவாகின.
                                              (தொடரும்)